கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
கயத்தாறையடுத்த திருமலாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கி. கணபதி (80). தனக்குச் சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்களும், பூச்செடிகளையும் வைத்து மனைவி சீதையம்மாளுடன் தோட்டத்திலேயே குடியிருந்து, பராமரித்து வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் உள்ள கிணற்றுடன் ஒட்டிய தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வீசிய காற்றில் கணபதி தடுமாறி அருகில் உள்ள கிணற்றில் விழுந்தாராம். இதைக் கண்ட அவரது மனைவி சீதையம்மாள் கயத்தாறு போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். கழுகுமலை தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.