கோவில்பட்டி தினசரி சந்தையில் உள்ள இரு கடைகளின் மேற்கூரையைப் பிரித்து பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த ராமையா மகன் சரவணன்(37). இங்குள்ள நகராட்சி தினசரி சந்தையில் பலசரக்குக் கடை நடத்தி வரும் இவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை காலை கடையை திறந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேஜையில் வைத்திருந்த ரூ.21ஆயிரம் மற்றும் பலசரக்குப் பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுபோல, அதே பகுதியில் முத்துப்பாண்டி மகன் சரவணன் கடையின் மேற்கூரையையும் உடைத்து கடையில் இருந்த ரூ.5ஆயிரம் மற்றும் பொருள்கள் திருடு போயிருப்பதும் தெரியவந்ததாம்.
இதுகுறித்து புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, கடையின் மேற்கூரையைப் பிரித்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.