திருச்செந்தூர் அருகே வீட்டில் பீரோவை உடைத்து ரூ.96,500 மதிப்பிலான தங்கநகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சிநகரைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி சந்திரா (46). இவர் தனது கணவருடன் காயாமொழி அருகில் உள்ள தேரிக்குடியிருப்பில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதனால் இவர்கள் தேரிகுடியிருப்பில் உள்ள தோட்டத்திலேயே தங்கி விடுவது வழக்கம். இவர்களது மகன் ஜெயவீரபாண்டியன், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர் மட்டும் குறிஞ்சிநகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அவரும் வேலைக்கு அதிகாலை 4 மணிக்கே புறப்பட்டு சென்று விடுவாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 18) விடுமுறை என்பதால் பெற்றோர்களுடன் தேரிகுடியிருப்பில் உள்ள தோட்டத்தில் தங்கி விட்டு திங்கள்கிழமை காலை ஜெயவீரபாண்டியன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம், உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆறரை பவுன் தங்க நகை, ரூ.11,500 , கேமரா, 3 ஜோடி வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததுள்ளது.
இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருடு போன பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 96 ஆயிரத்து ஐநூறு ஆகும்.