தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியை பார்வையிட்ட மாணவர்கள்
பொதுவருகை நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஏராளமான மாணவர், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் தொடக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொது வருகை நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் மாணவர், மாணவிகள் கல்லூரியை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கிவைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, மீன்வளக் கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியின்போது, 15 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு கல்லூரியின் அருங்காட்சியகம், நூலகம், திலேப்பியா மீன் குஞ்சு பொரிப்பகம், கணினி மீன்வளக் கல்விக்கூடம், மீன் பண்ணைகள், அலங்கார மீன்களின் காட்சியமைப்பு, மீன் தீவனத் தயாரிப்பு இயந்திரக்கூடம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
இதுதவிர, மீன்வள உயிரியல் ஆய்வுக்கூடம், கடற்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புக் கண்காட்சி, ஒலி-ஒளிக்கூடம், நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆய்வுக்கூடம், மீன் தரக்கட்டுப்பாடு ஆய்வகம், மீன்பதப்படுத்துதல் ஆய்வுக்கூடம், மீன்பிடி இயந்திர தொழிற் பட்டறை, மீன்வளச் சுற்றுச் சூழலியல் ஆய்வுக்கூடம், மீன்வள உயிரியல் தொழில்நுட்ப ஆய்வகம், மீன்வளப் பொருளியியல் கூடம் போன்ற இடங்களையும் பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும், மீன்வளம் சம்பந்தமான விடியோ காட்சிகளும் மாணவர், மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன.