தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, 5 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
குறைதீர் கூட்டத்தின் போது, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற பின், புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் வேடநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வேடநத்தம் ஊராட்சி அளவிலான விண்மீன் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், பசுமை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.20 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 4800 மதிப்பலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் என்.வெங்கடேஷ் வழங்கினார்.
இதுதவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த அரசு பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வாரிசுதாரர்களான வே.முருகன், தேசிங்குராஜன், பா. இசக்கிராஜா, ச. சக்தி உடையார் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் மீன்வளத்துறையில் மீன்வள மேற்பார்வையாளர் தரம்-2 என்ற பதவிக்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜையா, புதுவாழ்வு திட்டத்தின் திட்ட அலுவலர் கர்ணன், மீன்வளத் துறை இணை இயக்குநர் ரீனா செல்வி, உதவி இயக்குநர்கள் கணேஷ் நேரு, பாலசரஸ்வதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பி. சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.