தூத்துக்குடியில் பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தகுதிவாய்ந்த பேரூராட்சிகளை நகராட்சியாகவும், தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பேரூராட்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில இணைச் செயலர் எட்வர்ட் ஜெபசீலன் தலைமை வகித்தார். இதில், மாவட்டம் முழுவதிலுமிருந்து பேரூராட்சி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரூராட்சியில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது கலந்தாய்வு மூலம் வழங்க வேண்டும் என, எட்வர்ட் ஜெபசீலன் வலியுறுத்தினார்.