தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட கனிமவள உதவி இயக்குநரை தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து கனிமவளத் துறை ஆணையர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருபவர் கிருஷ்ணமோகன். இவர், தனது அதிகாரத்தை மீறிச் செயல்பட்டதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள கனிமவளத் துறை ஆணையர் பழனிச்சாமி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது,தனது அதிகாரத்தை மீறி 420 டன் கார்னெட் மணல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியதும், இதுதொடர்பாக சுங்கத் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் ஆட்சியரிடம் கையெழுத்தில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து,கனிமவள உதவி இயக்குநர் கிருஷ்ணமோகனை தாற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து கனிமவளத் துறை ஆணையர் பழனிச்சாமி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 8.8.13 முதல் தாதுமணல் எடுக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், தனியார் தாதுமணல் நிறுவனம் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக கொண்டுச் செல்லப்பட்ட 420 டன் தாதுமணல் எங்கு உள்ளது என்பது தொடர்பாக தூத்துக்குடி சார்-ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.