மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தூத்துக்குடியில் வீடுகளில் இருந்த மின்மோட்டார்களை புதன்கிழமை அகற்றச் சென்றதால் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடியில் வீடுகளில் இருந்த மின்மோட்டார்களை புதன்கிழமை அகற்றச் சென்றதால் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி உதவி ஆணையர்கள் சரவணன், ராமச்சந்திரன், பிரின்ஸ் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை கிருஷ்ணராஜபுரம் அன்னை வேளாங்கண்ணிநகர் பகுதிக்கு சென்று அங்குள்ள வீடுகளில் மின்மோட்டார் உள்ளதா என சோதனை நடத்தினர்.
அப்போது, வீடுகளிலிருந்த 14  மின்மோட்டார்களை பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் ஏற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்தீபன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட 14 மின் மோட்டார்களையும் திருப்பித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதிகாரிகள் அவற்றை திருப்பி தர முடியாது என மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
மேலும், மற்ற வீடுகளில் உள்ள மோட்டார்களை போலீஸார் பாதுகாப்புடன் அகற்றப்போவதாகவும், குடிநீர் இணைப்பை துண்டிக்கப்போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்மோட்டார்களை அகற்ற கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 மோட்டார்களையும் கொண்டு சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com