கழுகுமலையில் சனிக்கிழமை கண்டெய்னர் லாரி மீது வாகை மரம் விழுந்ததில் மின்கம்பம் சரிந்தது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கழுகுமலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சரக்குகளை இறக்கிவிட்டு தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வாகை மரத்தின் கிளையில் கண்டெய்னர் லாரி உரசியது. இதில் மரம் வேரோடு சரிந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்தது. அப்போது மின்கம்பமும் சரிந்தது. இதனால் அந்த வழியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இருந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்தவுடன் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் போக்குவரத்து சீரானது.