புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் குடிநீர், நிழற்குடை, பயணிகள் இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையில் ஈடுபட முயன்றனர்.
இதையொட்டி, பொதுமக்கள், வியாபாரிகள், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர், நல்லிணக்க பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் ஆகியோர் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர்கள் பவுல்ராஜ், ஜூடி, ஸ்டெல்லாபாய், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் விரைந்து சென்று தொழிற்சங்கத்தினர் முற்றுகையில் ஈடுபடவிடாமல் தடுத்தனர்.
உடனே, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் தமிழரசன், அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், வெள்ளத்துரை, இருளப்பசாமி, ஆரோக்கியராஜ், நகர திமுக விவசாய அணிச் செயலர் கிளி கருப்பசாமி, 5ஆவது தூண் உறுப்பினர் முருகன், வியாபாரிகள் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் நகராட்சி அலுவலகம் எதிர்புறம் சாலையோரத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களிடம், ஆய்வாளர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார்.