நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 102 தெருக்கள் உள்ளன. இங்கு 18 ஆயிரத்துக்கு மேலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் அனைத்து தெருக்களில் சுகாதாரம் தினமும் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் பேரூராட்சியில் பல பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. வியாபாரிகள் சங்கம், வள்ளுவர் வாசகர்வட்டம், இளைஞர் படைஆகியோர்
ஒத்துழைப்புடன் நீண்ட காலமாக தூர்வாராமல் இருந்த அழகம்மாள் ஓடை சீரமைக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அனைத்து தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனதரம் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தெருக்களிலும் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள் பால்ஆபிரகாம், தியாகராஜன் மற்றும் பணியாளர்களுடன் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நாசரேத் பேருந்து நிலையத்தில் தினமும் காலை பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது.
இதேபோல் ரயில் நிலையத்தில் தினமும் முற்பகல் 11 மணி முதல் பகல் 12மணி வரை பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திரித்துவ பேராலயத்தில் மக்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் நாசரேத் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும் நாசரேத் பேரூராட்சி டெங்கு காய்ச்சல் இல்லாத தூய்மையான நகரமாக காணப்படுகிறது. இங்கு டெங்கு காய்ச்சல் மற்றும் சுகாதாரம் குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார், வட்டாட்சியர் அழகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
நாசரேத் பேரூராட்சியில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முன்னோடி பேரூராட்சியாக உள்ளது என பேரூராட்சி செயல் அலுவலர் ம.ரெங்கசாமி தெரிவித்தார்.