சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்தவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாக, போலீஸாரை கண்டித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தை அண்ணா சுமை ஆட்டோ சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, மதுவிலக்கு போலீஸார் மற்றும் கிழக்கு காவல் நிலையத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன் அண்மையில் புகார் அளித்தாராம். இந்நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர் மீதே போலீஸார் வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டதாக கண்டனம் தெரிவித்தும், ராமகிருஷ்ணன் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க நிறுவனர்- தலைவர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில், அண்ணா சுமை ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர்கள் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
பின்னர், காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.