மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்தவர்கள் சாலை வழியாக மணல் கொண்டு செல்ல முறையான அனுமதி பெறவில்லை என்றார் மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் முடங்கிக் கிடப்பதாக இறக்குமதி செய்த நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் ஏதும் கூற முடியாது. இருப்பினும், சாலை வழியாக அவர்கள் மணல் கொண்டு செல்வதற்கு எந்தவித முறையான அனுமதியும் பெறவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 464 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 29.42 கோடி பெறப்பட்டு வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. உளுந்து, பாசிப்பயறு, பருப்பு, வத்தல், வெங்காயம் என அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.
விளாத்திக்குளம் வட்டத்தில் அதிக பாதிப்பு இருந்ததால் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது.
10 இடங்களில் நேரடியாக பாதிப்பை ஆய்வு செய்து அதில் 5 இடங்களில் கடந்த 7 ஆண்டுகளில் உள்ள விளைச்சலின் சராசரி அளவை கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.