தூத்துக்குடியில் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்குகிறார் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடியில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நவம்பர் 22 ஆம் தேதி கோரம்பள்ளம் அரசு ஐடிஐ வளாகத்தில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலரும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் என். சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் யு.எஸ். சேகர், அண்ணா தொழிற்சங்கச் செயலர் டாக் ராஜா, மீன் வளர்ச்சித் துறை வாரிய முன்னாள் தலைவர் இரா. அமிர்தகணேசன், மேற்கு பகுதிச் செயலர் முருகன், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தளபதி க. பிச்சையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியில் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு பயனளிக்கும் திட்டமான 4 ஆவது பைப் லைன் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஆளுநர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள் என்பதே கடந்த கால நிகழ்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.