கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தின் தெற்குப் புறத்தில் உள்ள நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நடைபாதையை அடைத்துவிட்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நடைபாதையில் சுழல்-கேட் அமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கொம்பையா, கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நல்லிணக்க பண்பாட்டுக் கழக நிறுவனர் சங்கரலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பின்னர், போராட்டக் குழுவினருடன் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், தங்கள் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில், நகராட்சி ஆணையர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து, மீண்டும் நடைபாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.