கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் 74 பேர் நூலக உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
நூலக வாசகர் வட்டம், ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் தேசிய நூலக வார விழா கோவில்பட்டி வட்டார நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் பேராசிரியர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் முத்துச்செல்வன், நாடார் நடுநிலைப் பள்ளிச் செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் 74 பேர் நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டு, வாரம் ஒருநாள் நூலகம் சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாசிப்புப் பழக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, நூலக உறுப்பினர்களாக சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி நூலக உறுப்பினர் அட்டையை வழங்கினார். இதில், பள்ளித் தலைமையாசிரியை செல்வி, நூலகப் புரவலர்கள் வினோபா, ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் கலைச்செல்வி வரவேற்றார். நூலகப் பணியாளர் செல்வராணி நன்றி கூறினார்.