கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட பாரதிய கிசான் சங்கத்தினர் சார்பில் , அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை முறையாக பங்கீடு செய்து வழங்க வேண்டும். அவசரமாக வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பாரதிய கிசான் சங்கத்தினர் வாயில் துணியைக் கட்டி மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேசு முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட இயற்கை விவசாயத் தலைவர் கருப்பசாமி, ஒன்றியச் செயலர் கிருஷ்ணசாமி, ஒன்றியத் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் நல்லையா, மாவட்ட மகளிரணித் தலைவி கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், போராட்டக் குழுவினர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்லப்பாண்டியனிடம் மனு அளித்தனர்.