சாத்தான்குளம் அருகே வடக்கு உடைப்பிறப்பில் இடிந்து விழும் ஆபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு உடைப்பிறப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வடக்கு உடைப்பிறப்பு, தெற்கு உடைப்பிறப்பு, புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபடியால் தொட்டியின் மேலே சில இடங்களில் சிமென்ட் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன் அடிப்பகுதியில் உள்ள தூண்களும் கம்பி வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. இந்த தொட்டியானது மணிநகரில் இருந்து காந்திநகர் செல்லும் சாலையோரமுள்ளது. அதன் அருகில் முத்தாரம்மன் கோயில் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. இதில் நாள்தோறும் தண்ணீர் ஏற்றப்பட்டு வருவதால் அது எந்நேரமும் இடிந்து விழும் ஆபாய நிலையில் உள்ளது. எனவே பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய ஆணையர் நாகராஜன் கூறியது: இதுகுறித்து யாரும் என்னிடம் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. குடிநீர் தொட்டியை நேரில் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.