சென்னையில் உருது மொழிப் பள்ளி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் தமிழ்நாடு அரசு ஹாஜிக்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் இக்கூட்டமைப்பினர் அளித்த மனு:
மீலாது நபி விழாவை அரசு சார்பில் நடத்த வேண்டும். உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியத்தில் உலமாக்களை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஹஜ் பயணம் மேற்கொள்ள தொடர்ந்து 3 ஆண்டு விண்ணப்பித்து, குலுக்கலில் பெயர் வரவில்லை என்றால் 4ஆம் ஆண்டு ஹஜ் பயணம் உறுதிசெய்யப்பட்டு வந்ததை, மத்திய அரசு நிகழாண்டுமுதல் ரத்து செய்து வெளியிட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவீரன் திப்பு சுல்தான் மணிமண்டபத்தை விரைவில் திறந்துவைக்க வேண்டும். சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் கலைக் கல்லூரி அருகேயுள்ள "மதரஸாயே அஃழம்' உருதுப் பள்ளி மழையால் சேதமடைந்துள்ள நிலையில், "உள்ளே நுழையவோ, தொழுகை நடத்தவோ அனுமதி இல்லை' என அங்கு எழுதப்பட்டுள்ளது. அந்நிலையைப் போக்க உருது முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்தில், உருது மொழி வளர்ச்சிக்காக பள்ளிக்கூடம் கட்டுவதோடு, ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ள உருது அகாதெமிக்காக வேண்டி அதைஏஈ பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.
தமிழ்நாடு அரசு ஹாஜிக்களின் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜியும் ஜமாஅத்துல் உலமா சபை மாநில பொருளாளருமான எஸ். முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, கன்னியாகுமரி மாவட்ட அரசு ஹாஜி ஆர்.என். அபூ சாலிஹ் பாக்கவி, ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி சலாஹூதீன் ஜமாலி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அரசு ஹாஜி முஹம்மது கஸ்ஸாலி பாஜில் மழாஹிரி, மேற்கு மாவட்ட அரசு ஹாஜி முஹ்யிதீன் அப்துல்காதிர் பைஜி, விருதுநகர் மாவட்ட அரசு ஹாஜி ஷாநவாஸ்கான் மஹ்ளரி உள்ளிட்டோர் முதல்வரிடம் மனு அளித்தனர்.