தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தக் கோரி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
பின்னர், கோரிக்கை மனுவை மண்டல துணை வட்டாட்சியர் சுப்புலட்சுமியிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை வட்டாட்சியர், தங்கள் கோரிக்கை மனுவை வட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீப்பெட்டி ஆலை உரிமையாளர்களுக்கு தங்கள் கோரிக்கையை பரிந்துரை செய்யப்படும் எனக் கூறினார்.