தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெயின்டர் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வாஞ்சி மணியாச்சியையடுத்த முறம்பன் காலனித் தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் கோபால்சாமி(60). தனியார் காற்றாலையில் காவலாளி. இவரது வீட்டருகே வசிப்பவர் தங்கப்பழம் மகன் செந்தூர்(38). பெயின்டர். இவரது மனைவி சாந்தி(32). இவரும், கோபால்சாமியும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்களாம். இதை செந்தூர் கண்டித்தாராம். ஆனால் கோபால்சாமி சாந்தியிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லையாம். இந்நிலையில் புதன்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய செந்தூர், சாந்தியிடம் கோபால்சாமி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அங்கு கிடந்த கட்டையால் கோபால்சாமியை செந்தூர் தாக்கிவிட்டு தப்பினாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு கோபால்சாமி இறந்தார். இதுகுறித்து மணியாச்சி போலீஸார் வழக்குப் பதிந்து, செந்தூரை வியாழக்கிழமை கைது செய்தனர்.