தூத்துக்குடி அருகே கடந்த ஆண்டு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி அருகேயுள்ள பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் காசிராஜன் (22). குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜலிங்கம் (19). காசிராஜன் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி செய்து வந்தார். ராஜலிங்கம் கல்லூரியில் படித்து வந்தார்.
இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி பேரூரணியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற இடத்தில், அங்குள்ள செந்தூர்பாண்டி என்பவரது வீட்டின் மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த தட்டப்பாறை போலீஸார் பேரூரணியைச் சேர்ந்த விக்ரம் (21) என்பவரை கைது செய்தனர்.
திருமணத்தையொட்டி மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்ட பதாகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கௌதமன், குற்றஞ்சாட்டப்பட்ட விக்ரமுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
இதையடுத்து விக்ரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.