கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான அரசின் பாடத் திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு, நாடார் உறவின்முறை சங்கச் செயலர் ஜெயபாலன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் கண்ணன், பள்ளிக் குழு உறுப்பினர் மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பாபு, முன்னாள் பள்ளித் தலைமையாசிரியர் சண்முகக்கனி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி இணைப் பேராசிரியர் ராஜா பேச்சிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமையாசிரியை செல்வி வரவேற்றார். ஆசிரியர் அருள்காந்தராஜ் நன்றி கூறினார்.