கோவில்பட்டியில் மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சிஐடியூ) சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரிய ஊழியர்களுக்கு 1-12-2015 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி வழங்கவேண்டும். மின்சாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக்க வேண்டும். களப் பணியாளர்களுக்கு விரைந்து பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் பெருமாள், கோட்டத் துணைச் செயலர் செந்தில்வேல் முருகன், துணைத் தலைவர் போத்திரெட்டி, கோட்டச் செயலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பு தொடங்கிவைத்தார். மண்டலச் செயலர் பீர்முகம்மது ஷா முடித்து வைத்தார்.