வில்லிசேரி பள்ளியில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்2  பயின்ற 81 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்2  பயின்ற 81 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சின்னராசு வரவேற்றார்.  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பள்ளியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்2  பயின்ற 81 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.
நிகழ்ச்சியில்,  அதிமுக ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட விவசாய அணிச் செயலர் ராமச்சந்திரன், இனாம்மணியாச்சி ஊராட்சி அதிமுக செயலர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியது:     கடந்த 5  ஆண்டுகளில் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர், மாணவிகள் பயிலுகின்றனர்.
  தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்2  பயின்ற 13ஆயிரத்து581   பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. அதில் முதல் கட்டமாக,   கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட வில்லிசேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 81  பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், மாணவர், மாணவிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. 50ஆயிரம் கேள்வி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, 482  மையங்கள் அமைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
மேலும், புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், மாணவர், மாணவிகளை தயார்படுத்த அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்தவுள்ளது. நகரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமின்றி, கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பிடம் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com