எட்டயபுரம் அருகே வைப்பாறு ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் கைது செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தர்மலிங்கம் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் ராமையா தலைமையிலான தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை வைப்பாறு ஆற்றுப்படுகையோர கிராமங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சக்கிலிபட்டி பகுதியில் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றுமணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்ததில், முறையான அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்ததாம். இதையடுத்து பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (39), வேலுச்சாமி (55), ஆதிலிங்கம் (37), மணிகண்டன் (32) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.