வள்ளியூரில் நடைபெற்ற திருநெல்வேலி மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மண்டல அளவிலான தடகளப் போட்டி வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 7, 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். இதில், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி கா.கிருஷ்ணகலா 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் வட்டெறிதலில் முதலிடமும், அதே பிரிவில் குண்டெறிதலில் 2ஆம் இடமும் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த மாணவியையும், உடற்கல்வி ஆசிரியர்கள் வீரலட்சுமி, முருகன், மாலாதேவி, சுரேஷ் ஆகியோரையும் பள்ளித் தலைவர் ர.செல்வராஜ், தாளாளர் ர.பால்ராஜ் மானுவேல், நிர்வாகக் குழு உறுப்பினர் ஞானப்பிரகாசம், முதல்வர் சுகந்தி ஆகியோர் பாராட்டினர்.