கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சந்தையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, நடைபாதைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக கடையை விஸ்தரிப்பு செய்துள்ளனர்.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் சந்தைக்குள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
மேலும், சந்தை வளாகத்திற்குள் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களிலும் சரக்குகளை ஏற்றி, இறக்குவதால் பொருள்களை வாங்க வருவோர் அவதிக்குள்ளாகின்றனர்.இதுகுறித்து மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர்- தலைவர் செல்லத்துரை கூறியது:
நகராட்சி தினசரி சந்தை குத்தகைதாரர் நகராட்சி நிர்வாகம் விதித்துள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை வியாபாரிகளிடம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சந்தையில் பெரும்பாலான கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. நடைபாதை தாற்காலிக கடைக்கு நகராட்சி எவ்வித அனுமதியும், உரிமையும் வழங்கவில்லை. நடைபாதை கடைகளால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி ஆணையர் முறையாக நகராட்சி தினசரி சந்தையை ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரம் அடங்கிய பட்டியலை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றி, எவ்வித தடங்கலுமின்றி பொதுமக்கள், பாதசாரிகள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.