சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவியின் கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
கொம்பன்குளத்தைச் சேர்ந்தவர் கோ. வயனப்பெருமாள் (எ)நம்பியார் (48). இவர் மனைவி ஜீவரத்தினம் கொம்பன்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கலிலின் போது வயனபெருமாள் (எ) நம்பியார், அவரது மனைவி ஜீவரத்தினம் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பே. சிவசுப்புவும் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதனிடையே தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்ட பிறகும் இருத்தரப்பினருக்குமிடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 21 ஆம்தேதி வயனபெருமாள் அவரது பைக்கில் இரட்டைகிணற்றில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க சென்ற போது, வழியில் அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத 4பேர் , இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்ய முயன்றனராம். இதில் பலத்த காயமுற்ற வயனபெருமாள் நாகர்கோவிலிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வயனபெருமாள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் மீனாகுமாரி , வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்த சு. நல்லக்கண், கால்வாயைச் சேர்ந்த இ. மந்திரம் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை சரண் அடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், அவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.