கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டி விநாயகர் கோயில் பின்புறம் உள்ள ஓடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சாலையை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் ஆக்கிரமித்து தனது பட்டா நிலம் எனக் கூறி போக்குவரத்துக்கு தடை செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் சிவந்தி நாராயணன் தலைமையில், நகரத் தலைவர் வேல்ராஜா, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பாலு உள்பட அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியர் அனிதா போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.