ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்.
தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பண்டாரம்பட்டி, மடத்தூர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பி.ஆர். பாண்டியன் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். காவிரி பிரச்னையில் கர்நாடகத்துக்கு உரிமையில்லை என அரசிதழில் வெளிவந்த பிறகு, அப் பிரச்னையை தீர்ப்பதற்கான முடிவு மத்திய அரசின் கையிலேயே உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்னும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். தமிழக அரசு காவிரி பிரச்னையில் வெளிப்படையாக செயல்படவில்லை என்றார் அவர். பேட்டியின்போது, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதன் உடனிருந்தார்.