எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி தங்கதமிழ்ச்செல்வன்.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். துணைப் பொதுசெயலர் டி.டி.வி.தினகரன், கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) மாலை அணிவிக்கிறார். அதனையடுத்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்க மறுத்ததையடுத்து, நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு இன்னும் 2 நாள்களில் வரும் என எதிர்பார்க்கிறோம்; நல்ல தீர்ப்பு வரும், அதன்படி தமிழகத்திற்கு நல்ல விடிவுகாலம் வரும் என்றார் அவர்.