கழுகுமலையில் கடத்தப்பட்ட  5,300 கிலோ ரேஷன் பச்சரிசி பறிமுதல்: 6 பேர் கைது

கழுகுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலீஸாரின் வாகனச்சோதனையில் கேரளத்துக்கு கடத்திச் சென்ற 5,300 கிலோ ரேஷன்

கழுகுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலீஸாரின் வாகனச்சோதனையில் கேரளத்துக்கு கடத்திச் சென்ற 5,300 கிலோ ரேஷன் பச்சரிசியை போலீஸார் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.  இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கழுகுமலை மேல கேட் அருகே உதவி ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தையடுத்த சுள்ளிமானூருக்கு பொருள்களை எடுத்துச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். 
அதில் 50 கிலோ எடை கொண்ட 106 மூட்டை ரேஷன் பச்சரிசி இருப்பது தெரியவந்தது.  அதையடுத்து போலீஸார் லாரி ஓட்டுநர் தெற்கு கழுகுமலையைச் சேர்ந்த காமராஜ் மகன் உப்பிலிராஜிடம் (23)  நடத்திய விசாரணையில், விருதுநகர் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள லாரி புக்கிங் நிலையத்திலிருந்து ரேஷன் பச்சரிசியை ஏற்றிக் கொண்டு செல்வது தெரியவந்தது. 
அதையடுத்து, கழுகுமலை போலீஸார் லாரி மற்றும் அதில் இருந்த ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு மூட்டைகளையும் பறிமுதல் செய்து,  தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் லாரி ஓட்டுநர் காமராஜ், லாரி புக்கிங் நிலைய உரிமையாளர் ஜனார்த்தனன் உள்பட 6  பேரை கைது செய்தனர். மேலும், லாரி, சுமை ஆட்டோ, தையல் மிஷின், எடை போடும் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com