கோவில்பட்டி அருகே பெண்ணை கேலி செய்ததை தட்டிக் கேட்ட 3 இளைஞர்களைத் தாக்கியதாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மந்தித்தோப்பு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெற்றிவேல் (55). கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் இவரது வீட்டில் இவரது பேத்தி இருந்து வருகிறாராம். இவரது பேத்தியை அதே பகுதியைச் சேர்ந்த சேட் என்ற மணிகண்டன் உள்பட சிலர் கடந்த 3 மாதங்களுக்கு முன் கேலி செய்தார்களாம். இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்தார்களாம். இதனால் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், சனிக்கிழமை வெற்றிவேலின் பேத்தி வீட்டின் முன் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாரிசெல்வம் மகன் சேட் என்ற மணிகண்டன்(18), மாடசாமி மகன் சபரிநாதன்(18), துரை மகன் மாரியப்பன்(17), ராஜ் மகன் சின்னா என்ற சின்னத்தம்பி(20), மூக்கையா மகன் விஜய் ஆகிய 5 பேரும் கிண்டல் செய்து அவதூறாகப் பேசினார்களாம்.
இதனை வெற்றிவேலின் மகன்கள் ராமசந்திரன், தங்கம் மற்றும் அவரது உறவினர் அய்யப்பன் மகன் செல்லையா ஆகியோர் கண்டித்தார்களாம். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் சேட் என்ற மணிகண்டன் உள்பட 5 பேரும் இவர்களை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில், காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில் 4 பேரை கைது செய்த போலீஸார், விஜய் என்பவரை தேடி வருகின்றனர்.