தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணை செய்து 4 மாதத்தக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து களத்தில் நிற்கும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. தூத்துக்குடி காவல்துறையினர் இனியும் பொதுமக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் வகையில் தேடுதல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை. பாலு, மாநகரச் செயலர் தா.ராஜா, புறநகரச் செயலர் பி.ராஜா, ஒன்றியச் செயலர் கே.சங்கரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தி.குமாரவேல், எம்.எஸ்.முத்து, வழக்குரைஞர் சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.