தூத்துக்குடியில் அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக 4 லாரிகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். மேலும், விதிமுறைகளை மீறிய வாகனங்களிடம் இருந்து ரூ. 52 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் சி. மன்னர் மன்னன் தலைமையில், ஆய்வாளர்கள் உலகநாதன், ராஜேஷ் ஆகியோர் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி, துறைமுகம் சந்திப்பு, புதுக்கோட்டை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக பாரங்களைச் ஏற்றிச் சென்றதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதாகவும் 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்களில் இருந்து ரூ. 22,500 வசூலிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறியது, சாலை பாதுகாப்பு விதிகளை சரியாக கடைப்பிடிக்காமல் இருந்தது என்ற அடிப்படையில் ரூ. 52 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும், பல வாகனங்களுக்கு ரூ. 1.31 லட்சம் அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சி. மன்னர் மன்னன் கூறியது: தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் 183 வாகனங்களை சோதனை செய்தோம். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது மற்றும் அரசின் விதிமுறையை மீறியதாக 51 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடிக்கடி சோதனை மேற்கொள்ளப்பட்டு விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.