பயிர்க் காப்பீடு பிரீமியம் தொகையை சங்கத்திலேயே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி இளையரசனேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை பாரதிய கிசான் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
பயிர்க் காப்பீடு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய துணைத்தலைவர் செல்லபாண்டியன், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர், அதிகாரிகளின் ஆலோசனைப்படி, போராட்டக் குழுப் பிரதிநிதிகள் கோவில்பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். விவசாயிகள் வைப்புத் தொகை இல்லாமல் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கலாம் என அதிகாரிகள் உறுதியளித்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.