பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதலை ஒரே அரசாணையில் வழங்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் குறித்து மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும்; கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற வசதிகள் செய்ய வேண்டும்; கணினி வழிச்சான்று, இணையதளப் பணிக்கான செலவுத் தொகையை வழங்க வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பூதியமாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறுப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் கோவில்பட்டியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கணேசப்பெருமாள் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் பாலமுருகன், மாவட்ட அமைப்புச்செயலர் சிவகுமார், மாவட்டப் பிரசாரச் செயலர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மாரிமுத்து, அமைப்பின் மாநில முதன்மை பொதுச்செயலர் வெங்கடேஸ்வரன், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.