தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதை ஏராளமான மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அசோக்குமார் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் து. நாகராஜன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியில், அரியவகை உயிரினங்களான கடல் ஆமை, கடல் அட்டை, பவளப்பாறைகள், வண்ண மீன்கள், சிப்பி வகைகள், கடல் பாசி, சங்கு, பதப்படுத்தப்பட்ட அரியவகை மீன்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், கடல் பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாகவும், ஆழ்கடல் நீச்சல் தொடர்பான விளக்கங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதை ஏராளமான மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை உதவி இயக்குநர் ஹெலன், வனவர்கள் அன்பழகன், மதனகுமார், சுற்றுச்சூழல் திட்ட மேலாளர் நசீமா பானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சி வியாழக்கிழமை (பிப். 15) வரை நடைபெறுகிறது.