பெரியதாழையில் சிறுமீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பெரியதாழை மீனவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம் ஒன்றியம், பெரியதாழை கடலிலில் சீற்றம் அதிகமாக இருந்து வந்ததால் மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். இதையடுத்து, மீனவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டதன்பேரில், பெரியதாழையில் ரூ. 25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் மேற்கு பகுதியில் 800 மீட்டரும், கிழக்கு பகுதியில் 200 மீட்டர் அளவிலும் பாலம் அமைக்கப்படுகிறது.
இதனால் குறைவான அளவு அமைக்கப்பட்டு வரும் பாலம் அருகே கடலிலில் அடிக்கடி சீற்றம் அதிகமாக காணப்பட்டு கரையில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கரையில் படகுகள் நிறுத்த முடியாமல் மீனவர்கள்அவதிக்குள்ளாகின்றனர். இதனால் குறைவான அளவு அமைக்கப்பட்டு வரும் பாலத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும். இப்பகுதியை மையமாக கொண்டு சிறு மீன்பிடித்துறைமுகம் அமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.