மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவியை ஆட்சியர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி ப. முத்துமீனா கலந்து கொண்டார்.
அவர், குண்டு எறிதல் போட்டியில் முதல் பரிசும், ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த மாணவி ப. முத்துமீனா தான் பெற்ற பரிசுகளையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். மாணவியை பாராட்டிய ஆட்சியர் என். வெங்கடேஷ் கூறுகையில், மாணவி முத்துமீனா மாவட்டத்துக்கு பெருமை சேர்ந்துள்ளார். இதேபோல, மாற்றுத்திறனாளிகள் தாமாக முன்வந்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.
மேலும், சண்டீகரில் மார்ச் மாதம் நடைபெற உள்ள, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி ப. முத்துமீனா வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.