சென்னை அருகே ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாடிய லாரி ஷெட் உரிமையாளர் வேல்முருகன் போலீஸாரால் தேடப்பட்ட நிலையில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
சென்னை பூந்தமல்லிலி அருகே மலையம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட்டில் கடந்த 6ஆம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 125க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர். அது குறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று 75 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த லாரி ஷெட் உரிமையாளரும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவருமான பார்த்தசாரதி மகன் வேல் என்ற வேல்முருகன் (45) ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழிப்பறி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட நிலையில், பெங்களூர் வழக்குரைஞர் சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞர் துரைராஜ், வழக்குரைஞர் முத்துக்குமார் ஆகியோருடன் வந்து சரணடைந்த வேல்முருகனை 15 நாள் நீதிமன்றக் காவலிலில் வைக்கவும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் 23ஆம் தேதி ஆஜர்படுத்தவும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை சிறைச்சாலையில் வேல்முருகன் அடைக்கப்பட்டார்.