கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விடும் தினமான புனித வெள்ளிக்கிழமையையொட்டி அதற்கு முந்தைய 40 நாள்களை, கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதன் தொடக்கம் சாம்பல் புதன் என அழைக்கப்படுகிறது. தவக்காலம் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு தவக்காலத்தின்போது குருத்தோலை பவனியில் பயன்படுத்தப்பட்ட ஓலைகள் தீயில் கொளுத்தப்பட்டு, அந்த சாம்பலை பங்குத்தந்தைகள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசி சிலுவை அடையாளமிட்டனர்.
தூத்துக்குடி சின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கலந்துகொண்டு திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பல் பூசினார். இதேபோல், தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை லெரின் டிரோஸ் தலைமையிலும், புனித அந்தோணியார் திருத்தலத்தில் பங்குத்தந்தை சுசீலன் தலைமையிலும், லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிராங்ளின் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.