கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயணியர் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். நகரச் செயலர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பங்காருசாமி, மாவட்ட துணைத் தலைவர் திருப்பதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தொடங்கிவைத்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
நகராட்சியால் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில் வரியைக் குறைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட கடை வாடகையை திரும்பப் பெற வேண்டும். அனைத்து வார்டுகளிலும் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும்.
தினசரி சந்தை வளாகத்தில் நடைபாதையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், நகரப் பொருளாளர் பிச்சைக்கனி, நகர இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாரியப்பன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்புராயலு, பிரேம்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, வழக்குரைஞரணி அய்யலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.