திருச்செந்தூர் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, 10ஆம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா இம்மாதம் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் அம்மன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
10ஆம் திருநாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருள, காலை 6.25 மணிக்கு அம்மன் தேர் புறப்பட்டு, நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தது.
நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் பா.பாரதி, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், திருவிழா பணியாளர் பிச்சையா, சிவன் கோயில் மணியம் நவநீதகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், வடிவேல், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரவில், அம்மன் அலங்காரச் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி, சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து, வீதி வலம் வந்து திருக்கோயில் சேர்ந்தது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.