தூத்துக்குடியில் சனிக்கிழமை இளம்பெண்ணை கொலை செய்து சடலத்தை காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தாயின் சடலத்தின் அருகே அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்ட போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி உமா (26).
மாரியப்பன் கோவையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தனது இரண்டரை வயது ஆண் குழந்தையுடன் தூத்துக்குடியில் வசித்து வந்த உமா, சனிக்கிழமை பகல் 12 மணியளவில் தையல் பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றாராம்.
இந்நிலையில், ஜோதிநகர் பகுதியில் உமா கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், சடலத்தின் அருகே அவரது இரண்டரை வயது ஆண் குழந்தை அழுது கொண்டே இருப்பதாகவும் சிப்காட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட குழந்தையை போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
உமாவை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது சடலத்தையும், குழந்தையையும் காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.