பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் கோவில்பட்டி வட்டக் குழு சார்பில் சங்க அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினபிரவீன், மாநகரக் குழுத் தலைவர் ஜாய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு பரிசோதனையும், அடையாளப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களை எந்த நிபந்தனையுமின்றி ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சங்க மாவட்டத் தலைவர் அமர்நாத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் சுலேராஜ், விளாத்திகுளம் ஒருங்கிணைப்பாளர் சத்யா, கோவில்பட்டி வட்ட உறுப்பினர் சுக.ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.