திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த சில நாள்களாகவே விரதமிருந்து, மாலை அணிந்த பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வந்துள்ளதால் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் பொங்கலன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தங்கள் இல்லங்களுக்கு திரும்பி பொங்கலிடுவது வழக்கம்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காணும் பொங்கல்: திங்கள்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு, கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.