இந்து முன்னணி கொடிக் கம்பம் அகற்றம்: இரு தரப்பினரிடையே மோதலில் ஒருவர் காயம்

நாசரேத்தில் இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.

நாசரேத்தில் இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
இந்து முன்னணி சார்பில் விவேகானந்தர் பிறந்த தினம் கொண்டாடுவதற்காக நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொடிக்கம்பம் அனுமதியில்லாமல் புதிதாக அமைத்ததாக கூறப்படுகிறது.
இதை அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர் அப்புறப்படுத்தினராம். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இந்து முன்னணி பிரமுகர் அருணாசலம் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கிராம நிர்வாக அலுவலர் தேசிகன் புகாரின்பேரில், அனுமதியில்லாமல் புதிதாக கொடிக்கம்பம் அமைத்ததாக, இந்து முன்னணி நகரத் தலைவர் வெட்டும்பெருமாள் மீதும், கொடிக்கம்பத்தை அகற்றியதாக ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இரு தரப்பினருக்குமிடையே மேலும் மோதல் எற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணிக்கம், செல்வக்குமார் ஆகியோர் சம்பந்தமில்லாமல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் திரண்டு, ஊர்வலமாக காவல் நிலையத்தில் முறையிட வந்தனர்.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com