மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தெரு மற்றும் சாலைகளில் கொட்டக்கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகானந்தம் ஆகியோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை இருவகைகளாக தரம் பிரித்து தினந்தோறும் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டும்.
குப்பைகளை தெரு மற்றும் சாலைகளில் கொட்டுவதை தவிர்த்து ஊர் சுகாதாரம் காத்திடவும், தூய்மையான ஊராட்சியாக உருவாக்கிடவும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஊராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது.
நீர்வளம், நிலவளம் காத்திட பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். மண் வளம், மனித வளம், கடல் வளம் மற்றும் வனவளத்தை அழிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பாலிதீன் பைகளை தவிர்த்து, உணவுப் பொருள்கள் மற்றும் இதரப் பொருள்களை வாங்கிட கூடை, துணிப்பை, பாத்திரங்கள், சனல் பைகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.